சமீப காலமாக தொடர்ச்சியான மரணங்கள் ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் அதிர்ச்சியைத் தருகிறது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பிரபல காமெடி நடிகர்கள் விவேக் – பாண்டு – நெல்லை சிவா – மாறன், பிரபல இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன் – தாமிரா, பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த், கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், பாடகி லதா மங்கேஷ்கர் என ரசிகர்களுக்கும், திரையுலக பிரபலங்களுக்குமே பிடித்தமான நபர்களின் இழப்பு அதிர்ச்சியளிக்கிறது.
இந்த சூழலில் இன்னொரு மரணச் செய்தி வந்திருக்கிறது. சினிமாவில் பிரபல பின்னணி பாடகர்களில் ஒருவராக வலம் வந்தவர் கே.கே (கிருஷ்ணகுமார் குன்னத்). இவர் தமிழில் ‘கல்லூரி சாலை, ஸ்ட்ராபெர்ரி கண்ணே, உயிரின் உயிரே, கல்யாணம் தான் கட்டிக்கிட்டு, நினைத்து நினைத்து பார்த்தேன், நிஜமா நிஜமா, காதலிக்கும் ஆசை, அப்படி போடு, நீயே நீயே, பத்துக்குள்ள நம்பர், ஒரு வார்த்தை கேட்க’ போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார்.
பாடகர் கே.கே தமிழ் மொழி மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளிலும் பல பாடல்களை பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 53 வயதான பாடகர் கே.கே கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடிக் கொண்டிருக்கையில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் என தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.