மணிரத்னம் படம் மிஸ் ஆனது எப்படி? சாந்தனு விளக்கம்

  • May 21, 2020 / 09:01 PM IST

மணிரத்னம் படம் மிஸ் ஆனது எப்படி? என நடிகர் சாந்தனு தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஏற்கனவே கிட்டத்தட்ட கோலிவுட் திரையுலக பிரபலங்கள் அனைவரும் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, அதிதிராவ் ஹைத்ரி, அஸ்வின், ஜெயராம், சரத்குமார், கிஷோர், ரியாஸ்கான், லால், மோகன்ராமன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சாந்தனு பாக்கியராஜ் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் திடீரென அந்த வாய்ப்பு தனக்கு கை நழுவிப் போனதாக சாந்தனு பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்.

’வானம் கொட்டட்டும்’ இயக்குநர் தனா தான் இந்த தகவலை தனக்கு கூறியதாகவும் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் தன்னுடைய பெயரும் பரிசீலனையில் இருப்பதாகவும் தனக்கு தெரியவந்ததாக சாந்தனு கூறியுள்ளார்.

ஆனால் அந்த கேரக்டரின் வயதும் தன்னுடைய வயதும் முரணாக இருந்ததால் தான் அந்த கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் இருப்பினும் மணிரத்னம் அவர்களுடன் இயக்கத்தில் எதிர்காலத்தில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவதாகவும் சாந்தனு மேலும் கூறியுள்ளார்.

தளபதி விஜய்யுடன் நடித்த ’மாஸ்டர்’ படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நடிகர் சாந்தனு தற்போது விக்ரம் சுகுமாரன் இயக்கும் ’ராவணன் கூட்டம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகியாக அதுல்யா ரவி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus