நடிகர் ஷாம் திடீரென போலீசாரால் கைது- காரணம் என்ன?

  • July 28, 2020 / 11:31 AM IST

தமிழில் “லேசா லேசா”, “இயற்கை” போன்ற படங்களில் நடித்து அறிமுகமான நடிகர் ஷாம், இன்று சென்னையில் தனது அடுக்குமாடி குடியிருப்பில் கைதுசெய்யப்பட்டார்.

நடிகர் ஷாம் தனது அடுக்குமாடி குடியிருப்பில் பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக புகார் வந்ததையடுத்து போலீசார், அவர் உட்பட அங்கு இருந்த 13 பேரையும் கைது செய்துள்ளார்கள்.

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோட்டில் நடிகர் ஷாமுக்கு சொந்தமான ஒரு அடுக்குமாடி குடியிருப்பு இருப்பதாகவும், இந்த குடியிருப்பில் அவர் சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்களுடன் பணம் வைத்து சூதாடி வருவதாகவும் புகார் வந்துள்ளது.

சட்டவிரோதமான இந்த செயலில் இவர்கள் ஈடுபட்டு வருவதாக வந்த புகாரையடுத்து, நேற்று இரவு போலீசார் ஷாமின் அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென நுழைந்து சோதனை செய்தபோது நடிகர் ஷாம் உட்பட 13 பேர் சூதாட்டத்தில் சட்டவிரோதமாக ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவர்களிடமிருந்து பணம், சீட்டுக்கட்டு ஆகியவற்றை பறிமுதல் செய்து இவர்கள் அனைவரையும் கைது செய்தனர். பல நாட்களாக நடிகர்கள், இயக்குனர்கள், தொழிலதிபர்கள் என பலரும் இங்கு வந்து பணம் வைத்து சட்டவிரோதமாக சூதாட்டம் ஆடியதாகவும் நடிகர் ஷாம் தன் அடுக்குமாடி குடியிருப்பை ஒரு சூதாட்ட கிளப் போல நடத்தி வந்ததும் புகாரில் தெரியவந்துள்ளது.

தற்போது கைது செய்யப்பட்ட ஷாம் உள்ளிட்ட 13 பேர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்கள். ஏற்கனவே இவர்கள் சட்டவிரோதமாக சூதாட்டம் ஆடுவது பற்றி பலமுறை போலீசில் புகார் வந்ததாகவும், அதை போலீசார் அலட்சியமாக விட்டு விட்டதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளது.

நடிகர் ஷாம் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகவிருக்கும் “பார்ட்டி” என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பி.எஸ்.விஜயகுமார் இயக்கத்திலும் “பிரம்மா” என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus