நடிகை சாந்தினி மீது முன்னாள் அதிமுக அமைச்சரின் மனைவி கொடுத்த பரபரப்பு புகார்!

  • June 1, 2021 / 06:36 PM IST

தமிழ் சினிமாவில் 2009-ஆம் ஆண்டு வெளியான படம் ‘நாடோடிகள்’. இந்த படத்தை இயக்குநர் சமுத்திரக்கனி இயக்க, ஹீரோவாக சசிக்குமார் நடித்திருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் பரணி, விஜய் வசந்த், கஞ்சா கருப்பு, நமோ நாராயணன், அனன்யா, அபிநயா, சாந்தினி தேவா ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த படம் சூப்பர் ஹிட்டானது. இதில் நடித்த நடிகை சாந்தினி தேவா ‘நாடோடிகள்’ படத்துக்கு பிறகு ‘2ஜி ஸ்பெக்ட்ரம், மதில் மேல் பூனை’ போன்ற படங்களில் நடித்திருந்தார். கடந்த மே 28-ஆம் தேதி, நடிகை சாந்தினி தேவா முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்திருந்தார்.

அவர் கொடுத்த புகாரில் “கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி வருவதுடன், இடையில் எனது கருவையும் கலைக்க வைத்தார். பின், திருமணம் செய்ய சொல்லி கேட்டு வந்ததால் என்னை அடித்து துன்புறுத்தினார். அதுமட்டுமன்றி, என்னுடைய அந்தரங்க ஸ்டில்ஸை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்றும், கூலிப்படையை வைத்து என்னை கொலை செய்து விடுவதாகவும் மணிகண்டன் மிரட்டி வருகிறார்” என்று கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து மணிகண்டன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின், கண்டிப்பாக போலீஸ் கைது செய்து விடுவார்கள் என்பதால் மணிகண்டன் தலைமறைவானார். தற்போது, மணிகண்டனின் மனைவி சாந்தினி கூறியுள்ள அனைத்து விஷயங்களும் பொய் என்று கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி ராமநாதபுரம் எஸ்.பி.யிடம் புகார் கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus