‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் குளறுபடி… ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்!

  • September 11, 2023 / 08:09 PM IST

சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் படத்தின் ஆல்பமே மெகா ஹிட்டானது. அந்த படம் தான் ‘ரோஜா’. இந்த படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருந்தார். ‘ரோஜா’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து பல படங்களுக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தமானார். தமிழ் மொழி மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானின் பல பாடல்கள் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் உள்ளது. ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியை பார்க்க ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்கள் குவிந்தனர். ஆனால், டிக்கெட்கள் அதிகமாக விற்கப்பட்டதால் ரசிகர்கள் பலர் நிற்க கூட இடம் இல்லாமல் அவதிப்பட்டுள்ளனர். மேலும், பலர் உள்ளே கூட செல்ல முடியாமல் திரும்பிச் சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பல ரசிகர்கள் தங்களது வருத்தத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட வண்ணமுள்ளனர். தற்போது, ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் “சென்னை மக்களே ‘மறக்குமா நெஞ்சம்’ நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கியும், உள்ளே நுழைய முடியாமல் திரும்பிச் சென்றவர்கள் உங்களது டிக்கெட் நகலையும், குறைகளையும் arr4chennai@btos.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும். எங்களது டீம் உடனடியாக உங்களுக்கு பதில் அளிப்பார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus