“சிறிய சந்தேகம் இருப்பினும் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்”… ‘கொரோனா’விலிருந்து மீண்ட ‘அயலான்’ பட இயக்குநரின் பதிவு!

  • May 12, 2021 / 02:39 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவிக்குமார். இவர் இயக்கிய முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘இன்று நேற்று நாளை’. இப்போது, சிவகார்த்திகேயனை வைத்து ‘அயலான்’ என்ற சயின்ஸ்-ஃபிக்ஷன் படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், இயக்குநர் ரவிக்குமார் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் “முன்னெச்சரிக்கையோடு இருந்தேன் இருந்தும் கொரோனா என்னை தொற்றியது. எந்தவித அறிகுறியும் இல்லை மூக்கில் ஒழுகியதும் கூட வழக்கமான அலர்ஜி என்ற அளவில் தான் நினைத்தேன் இருந்தும் சந்தேகத்தின் பேரில் 26.04 அன்று இரத்த பரிசோதனை செய்து பார்த்தேன் CBC, CRP, d-dimer அதில் CRP 26 என்ற அளவில் இருந்தது.

டாக்டர் வரபிரசாத் அதை கோவிட் என்று உறுதிசெய்து மருத்துவ ஆலோசனையும் மருந்துக்களையும் பரிந்துரைத்தார். வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு மருந்துக்களை எடுத்துக்கொண்டேன். என்னோடு அருகிலேயே இருந்த குழந்தை நறுமுகை (3) மீதும், மனைவி பிரியா மீதும் கவலை வந்தது. மறுநாள் எல்லோருக்கும் swab டெஸ்ட் எடுத்ததில் எனக்கும் நறுமுகைக்கும் மட்டும் பாஸிடிவ்.

டாக்டர் வரபிரசாத் மிகுந்த நம்பிக்கை கொடுத்தார். நறுமுகைக்கும் சிரப்புகள் எழுதி கொடுத்தார். பிரியாவின் அன்பும், சலிப்பற்ற உணவு உபசரிப்பும் மீண்டுவர ரொம்பவும் உதவியது. தொடர்ந்து மருந்துக்கள் எடுத்துக்கொண்டேன். 14 நாட்கள் கடந்து நேற்று முன் தினம் 10.05 ஸ்வாப் பரிசோதனை ரிசல்ட் இப்போது வந்தது நெகடிவ் என்று. டாக்டர் வரபிரசாத் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

சார் என்ன வேணும் என்று கேட்டு தினசரி பொருட்கள் வாங்கிவந்து கொடுத்த என் உதவியாளன் நாகேந்திரனுக்கு என் அன்புகள். அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் உடனே இரத்த பரிசோதனை/ ஸ்வாப் செய்து கொள்வது மிக அவசியம். நோய் தொற்ற ஆரம்பித்த 7நாட்கள் மிக முக்கியமான நாட்கள் அதற்குள் மருந்துக்கள் எடுத்துக்கெள்வது அவசியம். காலதாமதம் செய்வதும் “எனக்கு வராது அதெல்லாம் ஒன்னும் இல்லை” “டெஸ்ட் பண்ணுனா கொரோனான்னு சொல்லிடுவாங்க” இப்படியாக அலட்சியமாக பரிசோதனையை தள்ளிபோடுவதும் நோய் உடலுக்குள் வீரியமடையவே உதவிசெய்யும்.

மிகுந்த விழிப்புணர்வோடு நோய்க்கு முந்தினால் மட்டுமே நோயை வெற்றிகொள்ள முடியும். நோய் தொற்றுக்கு ஆளான பிறகு ஃபேஸ்புக் மற்றும் செய்திகள் வாயிலாக இறந்தவர்கள் பற்றிய நியூஸ் கேட்க கேட்க மனபதற்றம் ஏற்படுகிறது. துளியும் தூக்கம் வரவில்லை. அதும் நம் மனநிலைமையை பாதிக்கிறது. நோயுற்ற காலத்தில் முடிந்த அளவு நியூஸ் பார்க்காமல் இருப்பது நல்லது. சுற்றிவர உறவுகளுக்குள்ளும், நட்புகளுக்குள்ளும் நிறைய தொற்று ஏற்பட்டுள்ளது. அன்பானவர்களுக்கு சொல்லிக்கொள்வதெல்லாம் ஒன்றுதான் சிறிய சந்தேகம் இருப்பினும் பரிசோதனை செய்துகொள்ளுங்கள், தாமதம் செய்யாமல் உங்கள் மருத்துவரை அணுகுங்கள். மீண்டு வருவோம்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus