ஓ.என்.வி விருது சர்ச்சை… வைரமுத்துவுக்கு ஆதரவாக பாரதிராஜா அறிக்கை!

  • May 29, 2021 / 08:22 PM IST

தமிழ் சினிமாவில் டாப் பாடலாசிரியர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘கவிப்பேரரசு’ வைரமுத்து. கேரளாவின் புகழ் பெற்ற ஓ.என்.வி விருதுக்கு வைரமுத்து தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீடூ சர்ச்சையில் சிக்கிய வைரமுத்துவிற்கு ஓ.என்.வி விருதா? என நடிகைகள் பார்வதி – கீது மோகன்தாஸ் – ரீமா கல்லிங்கல், இயக்குநர் அஞ்சலி மேனன், பாடகி சின்மயி ஆகியோர் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின், ஓ.என்.வி கலாச்சார அகாடமி நேற்று வெளியிட்ட புதிய அறிக்கையில் “வைரமுத்துவுக்கு கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட ஓ.என்.வி விருது தொடர்பாக மறுபரிசீலனை செய்ய உள்ளோம்” என்று கூறியிருந்தனர். தற்போது, வைரமுத்துவிற்கு ஆதரவாக பிரபல இயக்குநர் பாரதிராஜா ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “வணக்கம்.. என் படைப்புகளில் முன் கதை பின் கதை கதாபாத்திரங்களின் உணர்வுகளை பாடல்களில் வார்த்தைகளை அடக்கி ஆளத்தெரிந்த ஒரு கவிஞனை தேடி அலைந்து கொண்டிருந்த நேரம்.

சங்கம் வளர்த்த நம் முன்னோர்களின் வழித் தோன்றல்களாக மெய்ஞானம் அறிந்த விஞ்ஞானக் கவிஞனை கண்டெடுத்து ஒருப் பொன் மாலைப் பொழுதில் விதைத்தோம்.. வார்த்தை கவிதை வரிகள் காவியம்.. வியப்பு..! இரண்டு வரிகளின் இடைவெளி கதை சொல்கிறது.. வார்த்தை புதிது வரிகள் புதிது என் தாய் மொழி புதிதாக உணர்ந்தேன்.. அரை நூற்றாண்டு அருகில் நிற்கிறோம் என் கவிஞனை திரும்பிப் பார்க்கிறேன். வில்லோடு வா நிலவே, கருவாச்சி காவியம், கள்ளிக்காட்டு இதிகாசம், தண்ணீர் தேசம், மூன்றாம் உலகப் போர்.. பத்மஸ்ரீ, பத்மபூசன், சாகித்ய அகாதமி, ஏழு தேசிய விருது, எண்ணற்ற படைப்புகள், எண்ணற்ற விருதுகள்.. விருட்சமாய் என் தமிழ் உயர்ந்து நிற்கிறது. கர்வம் கொள்கிறேன்.

கேரளச் சகோதரர்களின் பேரன்பினால்.. மலையாள இலக்கியத்தின் உயரிய விருதான ஓ.என்.வி. எங்கள் கவிப்பேரரசு அவர்களுக்கு அறிவித்தது அறிந்து மகிழ்வுற்றேன்.. ஆனால் அரசியல் நெருக்கடியால் மறுபரிசீலனை என தற்போது செய்திகள் வந்திருப்பதை கண்டு வருத்தம் சிறிதளவும் இல்லை. சமீபகாலமாக எம் இனத்தின் மீதும் மொழி மீதும் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு எங்கிருந்தோ , தனிமனித மாண்பிற்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக சில நபர்களை கொண்டு மதம், இனம் , மொழியாக பிரிவினை ஏற்படுத்தும் விதமாக அறிவிக்கப் பட இயலாத போரினை தொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். தமிழர்களாகிய நாம் ஒற்றுமையுடன் இருந்து முறியடிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

உலகத்தமிழர்களின் நெஞ்சங்களில் கவிப்பேரசு என்கிற பட்டம் சூட்டி கம்பீரமாக நிற்கும் கவிஞனே உன்னை அசைத்துப் பார்த்துவிடலாம் என்பது வெறும் கனவாகவே இருக்கும். தமிழர்களுக்கு என்றும் உறுதுணையாக மாண்புமிகு தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். ‘இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள்’ எறியட்டும் அவர்களின் தாகம் தீரட்டும். குளம் என்பது கானல் நீர், நீ சமுத்திரம்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus