விவாகரத்து தொடர்பாக பரவிய செய்தி… இன்ஸ்டாவில் விளக்கமளித்த பூமிகா!

  • October 23, 2020 / 12:01 AM IST

திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூமிகா சாவ்லா. பூமிகா தமிழில் ஹீரோயினாக அறிமுகமான முதல் படமே ‘தளபதி’ விஜய்யுடன் அமைந்தது. அது தான் ‘பத்ரி’. ‘பத்ரி’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு ‘ரோஜாக் கூட்டம்’ என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு நான்கு வருடங்கள் எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்காமல் இருந்த பூமிகா, 2016-ஆம் ஆண்டு வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ என்ற படத்தில் நடித்தார்.

இதில் ‘ஐஸ்வர்யா’ என்ற கதாபாத்திரமாக வலம் வந்து ரசிகர்களின் லைக்ஸை குவித்தார். சூர்யா ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் இடம்பெற்ற ‘முன்பே வா’ என்ற பாடல் சூப்பர் ஹிட்டாகி, பூமிகாவிற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கித் தந்தது. ‘சில்லுனு ஒரு காதல்’ படத்துக்கு பிறகு ‘களவாடிய பொழுதுகள், யு டர்ன், கொலையுதிர் காலம்’ ஆகிய தமிழ் படங்களில் நடித்திருந்தார். பூமிகா தமிழ் மட்டுமில்லாமல், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, போஜ்புரி ஆகிய மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார்.

2007-ஆம் ஆண்டு பாரத் தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பூமிகா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இப்போது பூமிகா நடிப்பில் இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. கடந்த சில நாட்களாக, பூமிகாவிற்கும் அவரது கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து வரை சென்று விட்டதாக தண்டோரா போடப்பட்டது. தற்போது, பரவி வரும் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் பூமிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை ஷேரிட்டு திருமண நாளை கொண்டாடியது பற்றி கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus