பிரபல காமெடி நடிகர் யோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

  • April 10, 2021 / 08:20 PM IST

சினிமாவில் டாப் காமெடியன்களில் ஒருவராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படமான ‘மண்டேலா’வுக்கு இவரது ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். இப்படம் திரையரங்குகளில் ரிலீஸாகாமல், நேரடியாக விஜய் டிவியில் கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி காலை 9:30 மணிக்கு ஒளிபரப்பானது.

இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 5-ஆம் தேதி இந்த படம் பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’யிலும் ரிலீஸானது. இதனால் யோகி பாபுவின் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆனார்கள். இந்த படத்தை இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார், மிக முக்கிய ரோல்களில் சங்கிலி முருகன், ஜி.எம்.சுந்தர், ஷீலா ராஜ்குமார், கண்ணா ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார், பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராகவும், விது அய்யன்னா ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கிறார்கள். இந்த படத்தை விஜய் டிவியிலும், ‘நெட்ஃப்ளிக்ஸ்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மிலும் பார்த்த ரசிகர்கள் படம் நன்றாக இருந்தது என பாராட்டி வந்தார்கள்.

இந்நிலையில், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் ‘மண்டேலா’ டீம் மீது கொடுத்துள்ள புகார் மனுவில் “நடிகர் யோகிபாபு நடித்துள்ள ‘மண்டேலா’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது. அந்தப் படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. படம் முழுவதும் இது போன்ற காட்சிகள் உள்ளன. முடிதிருத்தும் மற்றும் மருத்துவ சமுதாயத்தைச் சேர்ந்த 40 லட்சம் மக்களை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம், இயக்குநர் மற்றும் நடிகர் யோகிபாபு ஆகியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus