2021-யில் இயற்கை எய்திய திரையுலக பிரபலங்களின் லிஸ்ட்!

  • December 30, 2021 / 07:36 PM IST

சமீப காலமாக தொடர்ச்சியான மரணங்கள் ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் அதிர்ச்சியைத் தருகிறது. இந்த ஆண்டு (2021) இயற்கை எய்திய திரையுலக பிரபலங்களின் லிஸ்ட் இதோ…

1.விவேக் :

‘காமெடி’ என்று சொன்னாலே விவேக்கின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் விவேக் பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம். இந்த ஆண்டு (2021) ஏப்ரல் 15-ஆம் தேதி நடிகர் விவேக் ‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக் கொண்டார். பின், ஏப்ரல் 16-ஆம் தேதி நடிகர் விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ICU-வில் அனுமதிக்கப்பட்ட விவேக்கிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தார்கள். ஆனால், ஏப்ரல் 17-ஆம் தேதி காலை சிகிச்சை பலனின்றி விவேக் இயற்கை எய்தினார்.

2.நெடுமுடி வேணு :

சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நெடுமுடி வேணு. இவர் தமிழில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் ‘இந்தியன்’, விக்ரமின் ‘அந்நியன்’, கார்த்திக் குமாரின் ‘பொய் சொல்ல போறோம்’, சிலம்பரசனின் ‘சிலம்பாட்டம்’, ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘சர்வம் தாளமயம்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் நெடுமுடி வேணு தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளத்தில் 500 படங்களுக்கு மேல் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இந்த ஆண்டு (2021) அக்டோபர் 11-ஆம் தேதி நடிகர் நெடுமுடி வேணு உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார்

3.ஆர்.என்.ஆர்.மனோகர் :

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் ஆர்.என்.ஆர்.மனோகர். இவர் தமிழில் ‘சலீம், நானும் ரௌடி தான், மிருதன், வீரம், வேதாளம், என்னை அறிந்தால், தீரன் அதிகாரம் ஒன்று, அயோக்யா, காப்பான், விஸ்வாசம், கைதி’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். ஆர்.என்.ஆர்.மனோகர் நடிகராக மட்டுமில்லாமல் ‘மாசிலாமணி, வேலூர் மாவட்டம்’ ஆகிய இரண்டு படங்களையும் இயக்கியிருக்கிறார். இந்த ஆண்டு (2021) நவம்பர் 17-ஆம் தேதி நடிகரும், இயக்குநருமான ஆர்.என்.ஆர்.மனோகருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார்

4.கே.வி.ஆனந்த் :

சினிமாவில் பாப்புலர் ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் வலம் வந்தவர் கே.வி.ஆனந்த். ஆரம்பத்தில் பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராக வலம் வந்த கே.வி.ஆனந்த், அதன் பிறகு டாப் ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான பி.சி.ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக சில படங்களில் பணியாற்றினார். பின், தமிழில் ‘காதல் தேசம், நேருக்கு நேர், முதல்வன், விரும்புகிறேன், பாய்ஸ், செல்லமே, சிவாஜி’, ஹிந்தியில் ‘காக்கி, நாயக் : தி ரியல் ஹீரோ, ஜோஷ்’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார் கே.வி.ஆனந்த். டாப் ஒளிப்பதிவாளர்களின் லிஸ்டில் இருந்த கே.வி,ஆனந்த், ‘கனா கண்டேன்’ படத்தை முதன் முதலாக இயக்கி இயக்குநர் அவதாரம் எடுத்தார். ‘கனா கண்டேன்’ படத்துக்கு பிறகு சூர்யாவை வைத்து ‘அயன், மாற்றான், காப்பான்’, ஜீவாவை வைத்து ‘கோ’, தனுஷை வைத்து ‘அனேகன்’, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியை வைத்து ‘கவண்’ ஆகிய படங்களை இயக்கினார் கே.வி.ஆனந்த். இந்த ஆண்டு (2021) ஏப்ரல் 30-ஆம் தேதி கே.வி.ஆனந்துக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார்.

5.பாண்டு :

தமிழ் சினிமாவில் பாப்புலர் காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் பாண்டு. 1970-ஆம் ஆண்டு வெளியான படம் ‘மாணவன்’. ஜெய்ஷங்கர் கதையின் நாயகனாக நடித்திருந்த இந்த படத்தை எம்.ஏ.திருமுகம் இயக்கியிருந்தார். இது தான் பாண்டு அறிமுகமான முதல் படமாம். இந்த படத்துக்கு பிறகு நடிகர் பாண்டுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘சிரித்து வாழ வேண்டும், கரையெல்லாம் செண்பகப்பூ, கடல் மீன்கள், பணக்காரன், நடிகன், முத்து, உள்ளத்தை அள்ளித்தா, காதல் கோட்டை, காலமெல்லாம் காதல் வாழ்க, சிட்டிசன், சுந்தரா டிராவல்ஸ், வில்லன், கில்லி, வில்லு, சிங்கம்’ போன்ற பல படங்களில் நடித்தார். இந்த ஆண்டு (2021) கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் பாண்டு மே 6-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.

6.எஸ்.பி.ஜனநாதன் :

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் எஸ்.பி.ஜனநாதன். இவர் இயக்கிய முதல் படமே சிறந்த படத்துக்கான தேசிய விருதை பெற்றது. அந்த படம் தான் ‘இயற்கை’. இந்த படத்துக்கு பிறகு இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து ‘ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ ஆகிய படங்களை இயக்கினார். தொடர்ந்து நல்ல படைப்புகளை கொடுத்து வரும் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த ஆண்டு (2021) மூளைச்சாவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.ஜனநாதன் மார்ச் 14-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.

7.மாறன் :

‘தளபதி’ விஜய்யின் ‘கில்லி, வேட்டைக்காரன்’, ஜீவாவின் ‘டிஷ்யூம்’, சுந்தர்.சி-யின் ‘தலைநகரம்’ போன்ற பல படங்களில் மிக முக்கிய ரோலில் நடித்தவர் பிரபல காமெடி நடிகர் மாறன். இந்த ஆண்டு (2021) கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் மாறன் மே 12-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.

8.நிதிஷ் வீரா :

‘புதுபேட்டை, பேரரசு, வெண்ணிலா கபடிகுழு 1 & 2, சிந்தனை செய், படைவீரன், காலா, பேரன்பு, ஐரா, நீயா 2, ராட்சசி, அசுரன்’ ஆகிய படங்களில் மிக முக்கிய ரோலில் நடித்தவர் பிரபல நடிகர் நிதிஷ் வீரா. இந்த ஆண்டு (2021) கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் நிதிஷ் வீரா மே 17-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.

9.நெல்லை சிவா :

‘வெற்றிக் கொடி கட்டு, இவன், ரன், அன்பே சிவம், சாமி, வின்னர், திருமலை, அன்பே ஆருயிரே, இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி, அறை எண் 305-ல் கடவுள், படிக்காதவன், கந்தசாமி, சகுனி’ போன்ற பல படங்களில் மிக முக்கிய ரோலில் நடித்தவர் பிரபல காமெடி நடிகர் நெல்லை சிவா. நெல்லை தமிழில் இவர் பேசும் காமெடி வசனங்களுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த ஆண்டு (2021) மே 11-ஆம் தேதி நெல்லை சிவாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார்

10.மாணிக்க விநாயகம் :

தமிழ் சினிமாவில் பாப்புலர் பின்னணி பாடகர்களில் ஒருவராக வலம் வந்தவர் மாணிக்க விநாயகம். இவர் தமிழில் ‘கண்ணுக்குள்ளே’ (படம் : தில்), ‘கொடுவா மீசை’ (படம் – தூள்), ‘சின்ன வீடா’ (படம் – ஒற்றன்) போன்ற பல பாடல்களை பாடி அசத்தியிருக்கிறார். மாணிக்க விநாயகம் பாடகராக மட்டுமில்லாமல் ‘திருடா திருடி, கம்பீரம், பேரழகன், கிரி, திமிரு, வேட்டைக்காரன், யுத்தம் செய்’ போன்ற பல படங்களில் நடிகராகவும் வலம் வந்தார். இந்த ஆண்டு (2021) டிசம்பர் 6-ஆம் தேதி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார்.

11.’நல்லெண்ணெய்’ சித்ரா

சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் ‘நல்லெண்ணெய்’ சித்ரா. இவர் தமிழில் ‘அபூர்வ ராகங்கள், அவள் அப்படித்தான், ராஜ பார்வை, ஆட்டோ ராஜா, ஊர்க்காவலன், புத்தம் புது பயணம், சேரன் பாண்டியன், பொண்டாட்டி ராஜ்யம், பெரிய குடும்பம், கோபாலா கோபாலா’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். நடிகை சித்ரா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இந்த ஆண்டு (2021) ஆகஸ்ட் 21-ஆம் தேதி நடிகை சித்ராவிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார்

12.தாமிரா :

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் தாமிரா. இவர் இயக்கிய முதல் படத்தில் இரண்டு பிரபல இயக்குநர்களான ‘இயக்குநர் சிகரம்’ பாலச்சந்தரும், ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவும் இணைந்து நடித்தார்கள். அது தான் ‘ரெட்டச்சுழி’. இதில் மிக முக்கிய ரோல்களில் ‘பிக் பாஸ் 4’ வின்னர் ஆரி, அஞ்சலி நடித்திருந்தனர். ‘ரெட்டச்சுழி’ படத்துக்கு பிறகு தாமிரா இயக்கிய படம் ‘ஆண் தேவதை’. இந்த படத்தில் இயக்குநர் சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘பிக் பாஸ் 4’ ரம்யா பாண்டியன் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’-க்காக ‘தி பெர்ஃபெக்ட் ஹஸ்பன்ட்’ என்ற வெப் சீரிஸை இயக்கி வந்தார் தாமிரா. இந்த ஆண்டு (2021) கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் தாமிரா ஏப்ரல் 27-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus