‘கொரோனா’ தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி வழங்கிய ‘லைகா’ சுபாஸ்கரன்!

  • June 19, 2021 / 07:18 PM IST

கொரோனா நோயின் இரண்டாவது அலை தாக்கம் இப்போது அதிகமாக இருப்பதால், மக்கள் பொருளாதாரம் இழந்து, உற்றார் உறவினர் உயிர் இழந்து, நோய் பற்றிய பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்து இருக்கின்றனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 11-ஆம் தேதி அவரது ட்விட்டர் பக்கத்தில் “#COVIDSecondWave-க்கு எதிரான போரில் நாம் அனைவரும் சேர்ந்து போரிட வேண்டிய நேரம் இது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிடுவீர்! பேரிடர் காலத்தில் பெறப்படும் நிதி கொரோனா தடுப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

நன்கொடை – செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும்” என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர்கள் சிவக்குமார் – சூர்யா – கார்த்தி ரூ.1 கோடியும், நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ரூ.50 லட்சமும், நடிகர் ‘தல’ அஜித் ரூ.25 லட்சமும், நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் ரூ.25 லட்சமும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ரூ.25 லட்சமும், இயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சமும், இயக்குநர் வெற்றிமாறன் ரூ.10 லட்சமும், இயக்குநர் மோகன் ராஜா – நடிகர் ‘ஜெயம்’ ரவி ரூ.10 லட்சமும், நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சமும் வழங்கியிருந்தனர்.

தற்போது, கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரபல தயாரிப்பாளர் சுபாஸ்கரன் ரூ.2 கோடி நிதியுதவி வழங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இப்போது சுபாஸ்கரனின் ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிப்பில் கமல் ஹாசனின் ‘இந்தியன் 2’, சிவகார்த்திகேயனின் ‘டான்’, த்ரிஷாவின் ‘ராங்கி’, இயக்குநர் மணிரத்னமின் ‘பொன்னியின் செல்வன்’ என நான்கு படங்கள் உருவாகி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus