“சமந்தா தான் முதலில் விவாகரத்து முடிவை எடுத்தாரா?”… கடுப்பாகி நாகசைத்தன்யாவின் அப்பா நாகார்ஜுனா போட்ட ட்வீட்!

  • January 28, 2022 / 01:46 PM IST

தெலுங்கு திரையுலகில் ‘ஏ மாயா சேசவே’ என்ற திரைப்படம் 2010-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை இயக்குநர் கெளதம் மேனன் இயக்கியிருந்தார். இதில் கதையின் நாயகனாக நாகசைத்தன்யா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சமந்தா டூயட் பாடி ஆடியிருந்தார். இது தான் சமந்தா அறிமுகமான முதல் தெலுங்கு திரைப்படமாம். இப்படத்தில் சமந்தா ‘ஜெஸ்ஸி’ என்ற கேரக்டராக வலம் வந்திருந்தார். இதில் இவரது நடிப்பு அனைவரையும் ஈர்த்து விட்டது.

இது ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ (தமிழ்) படத்தின் தெலுங்கு வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாஸ் காட்டும் சமந்தாவிற்கு, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. 2017-ஆம் ஆண்டு தனது முதல் படத்தின் கதாநாயகனான நாகசைத்தன்யாவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா.

கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 2-ஆம் தேதி நடிகை சமந்தாவும், நாகசைத்தன்யாவும் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். சமீபத்தில், நாகசைத்தன்யா மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “எங்கள் இருவரின் நலனையும் கருத்தில் கொண்டு நானும் சமந்தாவும் இணைந்து எடுத்த நல்ல முடிவு தான் விவாகரத்து. இந்த விஷயத்தில் சமந்தா சந்தோஷமாக இருக்கிறார் என்றால், எனக்கும் சந்தோஷம் தான்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், நாகசைத்தன்யாவின் அப்பாவும், முன்னணி நடிகருமான நாகார்ஜுனா “விவாகரத்து முடிவை முதலில் சமந்தா தான் எடுத்தார். அதன் பிறகே நாகசைத்தன்யாவும் அவரின் முடிவுக்கு சம்மதம் தெரிவித்தார். நாகசைத்தன்யா இம்முடிவுக்கு சம்மதம் தெரிவிப்பதற்கு முன்பு என்னை பற்றியும், எங்களது குடும்பத்தை பற்றியும் தான் நினைத்து கவலைப்பட்டிருக்கிறார்” என்று ஒரு பேட்டியில் சொன்னதாக டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது. தற்போது, இது தொடர்பாக நாகார்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில் “பரவி வரும் இந்த தகவல் உண்மையல்ல. வதந்தியே. தவறான தகவலை பரப்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus