SPB சார் இனி இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது… இரங்கல் தெரிவித்த நயன்தாரா!

  • September 26, 2020 / 08:00 PM IST

தமிழ் திரையுலகில் பிரபல பின்னணி பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இவர் இதுவரை 16 இந்திய மொழிகளில் 40000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். ஆறு முறை சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். இவர் ‘கேளடி கண்மணி, திருடா திருடா, காதலன், நாணயம்’ போன்ற பல படங்களில் நடிகராகவும் வலம் வந்திருக்கிறார். சமீபத்தில், ‘கொரோனா’வால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன் தினம் (செப்டம்பர் 24-ஆம் தேதி) மாலை SPB அட்மிட் ஆகியிருக்கும் மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட அறிக்கையில் “எங்களது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திரு. எஸ்.பி.பாலசுப்ரமணியமின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

எங்களது சிறப்பு மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்” என்று கூறப்பட்டது. பின், நேற்று (செப்டம்பர் 25-ஆம் தேதி) மதியம் 1:04 PM-க்கு சிகிச்சை பலனின்றி SPB இயற்கை எய்தினார் என்று தகவல் கிடைத்தது. தற்போது, இது தொடர்பாக நடிகை ;லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கையில் “தெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது. தலைமுறைகளை தாண்டி நம்மை மகிழ்வித்த திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாருடைய குரல், நம்முடைய எல்லா காலங்களுக்கும், காரணங்களும் பொருந்தி இருக்கும். நீங்கள் இனி இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது.

ஆயினும் உங்கள் குரல் என்றென்றும் நீங்கா புகழுடன் இருக்கும் . உங்களுக்கு அஞ்சலி செலுத்தி, எங்களுக்கு நாங்களே ஆறுதல் சொல்லிக் கொள்ளும் இந்த நேரத்தில் கூட உங்கள் பாடல் மட்டுமே பொருந்துகிறது. எங்கள் வாழ்வில் உங்களின் ஆளுமை அப்படி. நீண்ட காலமாக இடைவிடாமல் உழைத்து எங்களை மகிழ்வித்த உங்களுக்கு மனம் இல்லாமல் பிரியாவிடை கொடுக்கிறோம். பாடும் நிலா விண்ணிலிருந்து பாடட்டும். உங்களைப் பிரிந்து வாடும் உங்கள் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ,உங்கள் திரை உலக சகாக்களுக்கும், உலகெங்கும் பரவி இருக்கும் உங்கள் எண்ணற்ற ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த ஆறுதல் செய்தி இது” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus