ஆர்ஆர்ஆர் படக்குழுவால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள்: ஜூனியர் என்டிஆரின் அன்பான வேண்டுகோள்

  • May 20, 2020 / 03:45 PM IST

ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட முடியாத சூழலால், ஜூனியர் என்டிஆர் தனது ரசிகர்களுக்கு இதயப்பூர்வமான வேண்டுகோள் வைத்துள்ளார்.

பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, இரத்தம் ரணம் ரெளத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இதில, ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், அலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். டிவிவி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனய்யா, சுமார் 400 கோடி ரூபாய் பொருட் செலவில் தயாரிக்கிறார். பாகுபலி படத்தை போன்றே ஆர்.ஆர்.ஆர் படத்தையும் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் கிராபிக்ஸ் பணிகள், இறுதிக்கட்டப் படப்பிடிப்புகள் என அனைத்துமே லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படம் 2021ஆம் ஆண்டு ஜனவரி-8ஆம் தேதி வெளியாகும் திட்டமிட்டிருந்த நிலையில், ரிலீஸ் தேதியும் தள்ளிப்போனது. இந்நிலையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் ஜுனியர் என்.டி.ஆர், தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

ஆர்.ஆர். ஆர் படத்தில் நடித்து வரும் ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாள் மே 20ஆம் தேதி என்பதால், இதனைக் கொண்டாட காத்திருக்கின்றனர். ஆனால், ஆர்.ஆர்.ஆர் படத்தில் என்டிஆரின் கேரக்டர் கொண்ட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாக சாத்தியமில்லை என படக்குழு தெரிவித்துள்ளதால் ஏமாற்றமடைந்துள்ளனர். இதுகுறித்து ஆர்.ஆர்.ஆர் படக்குழு. “லாக்டவுன் நீடிக்கப்பட்டிருப்பதால், பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. கடும் முயற்சி எடுத்தும் டீசரையும் பர்ஸ்ட்லுக் போஸ்டரையும் அவர் பிறந்தநாளன்று வெளியிட முடியவில்லை. கடமையே என்று எதையோ உருவாக்கி வெளியிட விரும்பவில்லை.

உங்கள் காத்திருப்புக்கு நல்ல பலன் கிடைக்கும் என்பதை உறுதியாகச் சொல்கிறோம். அவரது லுக் வெளியாகும் போது திருவிழாபோல் கொண்டாடுவீர்கள்’ என்று தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, ஜூனியர் என்.டி.ஆர், தனது ரசிகர்களுக்கு அன்புகட்டளையுடன் கடிதம் எழுதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ” உங்களையும், உங்கள் அன்புக்குரியவர்களின் உடல்நிலையையும் பாதுகாக்க வேண்டிய நேரமிது. எனது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் நீங்கள் காட்டும் அன்பால் ஆனந்தமடைகிறேன் .

இந்த ஆண்டு, எனக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய மிகப்பெரிய பரிசு, வீட்டில் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள். எனது பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகாது என்பதால் பலர் ஏமாற்றத்துடன் இருப்பீர்கள் என்பது தெரியும். உங்களைப் போலவே படக்குழுவும் ஏமாற்றம் அடைந்துள்ளது. அவர்கள் சிறப்பான படத்தை கொண்டுவர கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ராஜமவுலியின் இந்தப் படம் பெருமை மிகுந்த படமாக இருக்கும். உங்களை வியப்பில் ஆழ்த்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus