ஜீன்ஸ் படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் பிரசாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஜோடி?!

  • October 15, 2020 / 11:51 AM IST

இந்தியில் ஸ்ரிராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் அடித்த திரைப்படமான “அந்தாதூன்” திரைப்படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகவுள்ளதாக செய்தி வந்துள்ளது.

இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் பெற்றுள்ளார் என்றும், இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் பிரசாந்த் சுமார் 23 கிலோ எடையை குறைத்து பியானோ பயிற்சி பெற்று வருவதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது.

இது மட்டுமின்றி இந்த படத்தில் நடிப்பதற்காக 5 முக்கிய கதாபாத்திரத்தில் ஐந்து முக்கிய ஹீரோயின்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

முதலில் இந்த திரைப்படத்தை இயக்குனர் மோகன்ராஜா இயக்குவதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது இதில் சிறிய மாற்றம் ஏற்பட்டு “பொன்மகள் வந்தாள்” திரைப்படத்தை இயக்கிய ஜேஜே ஃபேட்ரிக் தற்போது இந்த படத்தை இயக்க உள்ளதாகவும், பொன்மகள் வந்தாள் படத்தில் நடிகர் தியாகராஜனுக்கும் இவருக்கும் ஏற்பட்ட நல்ல நட்பு தான் இதற்கு காரணம் என்று தற்போது தகவல் வந்துள்ளது.

இதை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் இந்தியில் தபு நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகை ஐஸ்வர்யா ராயை ஆலோசித்து வருகிறார்களாம். ஒருவேளை இதில் நடிப்பதற்கு அவர் ஒப்புக்கொண்டால், பிரசாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஜோடி சுமார் 22 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த படத்தில் இணைந்து நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus