உங்கள் குரலும், நினைவுகளும் என்னுடன் என்றென்றும் வாழும்… SPB மறைவு குறித்து ரஜினி பேசிய உருக்கமான வீடியோ!

  • September 26, 2020 / 08:42 AM IST

தமிழ் திரையுலகில் பிரபல பின்னணி பாடகராக வலம் வருபவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இவர் இதுவரை 16 இந்திய மொழிகளில் 40000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். ஆறு முறை சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். இவர் ‘கேளடி கண்மணி, திருடா திருடா, காதலன், நாணயம்’ போன்ற பல படங்களில் நடிகராகவும் வலம் வந்திருக்கிறார். சமீபத்தில், ‘கொரோனா’வால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி மாலை 6 மணி முதல் 6.05 வரை பாடகர் எஸ்.பி.பி-யின் உடல் நிலை சீக்கிரமாக குணமாக திரையுலகினரும், இசை விரும்பிகளும் இணைந்து கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். அவரவர் இடத்திலிருந்து எஸ்.பி.பி-யின் பாடலை ஒலிக்க விட்டு இந்தப் பிரார்த்தனையை செய்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி SPB-க்கு ‘கொரோனா’ டெஸ்ட் எடுத்து பார்த்ததில் நெகட்டிவ் என்று வந்ததாக இவரின் மகன் சரணே ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ மூலம் உறுதிபடுத்தினார்.

நேற்று (செப்டம்பர் 24-ஆம் தேதி) மாலை SPB அட்மிட் ஆகியிருக்கும் மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட அறிக்கையில் “எங்களது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திரு. எஸ்.பி.பாலசுப்ரமணியமின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. எங்களது சிறப்பு மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்” என்று கூறப்பட்டது. இந்நிலையில், இன்று மதியம் 1:04 PM-க்கு சிகிச்சை பலனின்றி SPB இயற்கை எய்தினார் என்று தகவல் கிடைத்தது.

இது தொடர்பாக நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் “இன்னைக்கு ரொம்ப சோகமான நாள். கடைசி நிமிஷம் வரைக்கும் உயிருக்காக போராடி மதிப்பிற்குரிய எஸ்.பி.பி. அவர்கள் நம்மள விட்டு பிரிஞ்சிருக்காங்க. அவரோட பிரிவு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. எஸ்.பி.பி அவர்களோடைய பாட்டுக்கும், குரலுக்கும் ரசிகர்களாக இல்லாதவர்களே இந்தியாவில் இருக்க மாட்டாங்க. அவரோட குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus