அரசியல் என்ட்ரி… மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினி!

  • November 30, 2020 / 05:40 PM IST

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடிக்கிறார்.

கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி, ரஜினி ட்விட்டரில் வெளியிட்ட அறிக்கையில் “என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று (நவம்பர் 30-ஆம் தேதி) நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது, அனைவரும் அவரின் அரசியல் என்ட்ரி தொடர்பாக கேட்டுள்ளனர். பின், மக்கள் மன்றத்தின் செயல்பாடுகள் பற்றியும், தனது உடல்நிலை தொடர்பாகவும் ரஜினி பேசியதாக சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ரஜினி மீடியாவுக்கு கொடுத்த பேட்டியில் “மாவட்டச் செயலாளர்கள் சந்திப்பு நடந்தது. அவங்களோட கருத்துக்களை என்னிடம் சொன்னார்கள். நானும் என்னோட பார்வையை அவர்களிடம் பகிர்ந்துக்கிட்டேன். நீங்க என்ன முடிவு எடுத்தாலும், நாங்க உங்க கூட இருக்கோம் அப்படின்னு சொல்லிட்டு அவங்க வந்து சொல்லியிருக்காங்க. நான் வந்து என்னோட முடிவை எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் தெரிவிக்கிறேன்” என்று கூறினார். இன்று மாலை அல்லது நாளை (டிசம்பர் 1-ஆம் தேதி) காலை அரசியல் என்ட்ரி தொடர்பான அறிக்கையை ரஜினி வெளியிடுவார் என்று சொல்லப்படுகிறது.


Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus