“எனது ரசிக பெருமக்களுக்கும் இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்”… ரஜினி வெளியிட்ட அறிக்கை!

  • April 1, 2021 / 03:14 PM IST

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தை இந்த ஆண்டு (2021) நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 1-ஆம் தேதி) இந்திய திரையுலகின் உயரிய விருதாக கருதப்படும் ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து திரையுலக பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் ட்விட்டரில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணமுள்ளனர். தற்போது, இது தொடர்பாக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்தியத் திரையுலகின் மிக உயரிய தாதா சாகேப் பால்கே விருதை எனக்கு வழங்கிய மத்திய அரசிற்கும், மதிப்பிற்குரிய பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னில் இருந்த நடிப்புத் திறமையை கண்டுபிடித்து என்னை ஊக்குவித்த என்னுடைய பேருந்து ஓட்டுனரான நண்பன் ராஜ் பகதூருக்கும், வறுமையில் வாடும் போதும் என்னை நடிகனாக்க பல தியாகங்கள் செய்த என் அண்ணன் திரு.சத்யநாராயணா ராவ் கெய்க்வாட் அவர்களுக்கும், என்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்து, இந்த ரஜினிகாந்தை உருவாக்கிய எனது குருநாதர் திரு. கே.பாலச்சந்தர் அவர்களுக்கும், திரையுலக தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஊடகங்கள் மற்றும் என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள எனது ரசிக பெருமக்களுக்கும் இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்.

என்னை மனமார்ந்து வாழ்த்திய மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், மதிப்பிற்குரிய துணை முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கும், மதிப்பிற்குரிய எதிர் கட்சித் தலைவர், நண்பர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கும், மத்திய மாநில அரசியல் தலைவர்களுக்கும் நண்பர்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும், என்னுடைய நலம் விரும்பிகளுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க தமிழ் மக்கள்! வளர்க தமிழ்நாடு! ஜெய்ஹிந்த்!!!” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus