“இந்த விஷயம் எனக்கு மிகுந்த மன வேதனை அளித்தது”… விஷால் கொடுத்த புகார் குறித்து ஆர்.பி.சௌத்ரி அறிக்கை!

  • June 18, 2021 / 07:12 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். பிரபல தயாரிப்பாளரின் மகனாக இருக்கும் விஷால், திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார். விஷாலுக்கு முதல் படம் ‘செல்லமே’. இரண்டாவது படமான ‘சண்டக்கோழி’-யில் சண்டைக் காட்சிகளில் மாஸ் காட்டியிருந்தார் விஷால்.

லிங்குசாமி இயக்கிய ‘சண்டக்கோழி’ மெகா ஹிட்டானதும், நடிகர் விஷாலுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது, விஷால் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2’, ‘எனிமி’ மற்றும் அறிமுக இயக்குநர் து.ப.சரவணன் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், கடந்த ஜூன் 9-ஆம் தேதி விஷால் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மீது காவல் துணை ஆணையரிடம் புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரில் “எனது படங்களை தயாரிப்பதற்காக ஆர்.பி.சௌத்ரியிடம் எனது வீட்டுப் பத்திரம் உட்பட சில உறுதிமொழி பத்திரங்களை ஆவணங்களாக கொடுத்து கடன் வாங்கியிருந்தேன். இப்போது கடனை திருப்பி கொடுத்த பின்பும் ஆர்.பி.சௌத்ரி உறுதிமொழி பத்திரங்களை திருப்பி கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்” என்று கூறியிருந்தார்.

தற்போது, இது தொடர்பாக தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில் “பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு ஆர்.பி.சௌத்ரி எழுதிக் கொள்வது. மூன்று வருடங்களுக்கு முன்பு நடிகர்‌ திரு.விஷால்‌ ‘இரும்புத்திரை’ படம்‌ தயாரிக்க என்னிடம்‌ பைனான்ஸ்‌ வாங்கியிருந்தார்‌. அந்த படத்திற்கு நானும்‌ விநியோகஸ்தர்‌ திரு.திருப்பூர்‌ சுப்பிரமணியும்‌ சேர்ந்து பணம்‌ கொடுத்தோம்‌.

‘இரும்புத்திரை’ படம்‌ வெளியீட்டில்‌ திரு.விஷால்‌ எனக்கு கொடுக்கவேண்டிய பணத்தில்‌ பாதி தொகையை கொடுத்துவிட்டு மீதி தொகையை சில தவணைகளில்‌ கொடுப்பதாக கூறினார். நானும்‌ ஒரு தயாரிப்பாளர்‌ என்ற முறையில்‌ படம்‌ வெளியாக வேண்டுமென்று ஒப்புக்கொண்டு clearance கொடுத்தேன்‌. இறுதியாக இருந்த பாக்கி தொகையை அவர்‌ தயாரித்து நடிக்கும்‌ ‘சக்ரா’ திரைப்படத்தின்‌ வெளியீட்டில்‌ தருவதாக கூறியிருந்தார்‌.

‘சக்ரா’ படத்தின்‌ வெளியீட்டின்‌ பொழுது எனக்கு தர வேண்டிய பணத்தை திரு.திருப்பூர்‌ சுப்பிரமணியம்‌ அவர்கள்‌ ‘சக்ரா’ படத்தின்‌ கோவை ஏரியா விநியோக உரிமையை பெற்றுள்ளதாகவும்‌ அதில்‌ வரும்‌ overflow பணத்தின்‌ மூலம்‌ எனக்கு வரவேண்டிய தொகையை கொடுத்துவிடுவதாக கூறினார்‌. நானும்‌ அதற்கு ஒப்புக்கொண்டேன்‌. அதன்‌ அடிப்படையில்‌ நானும்‌ திரு.விஷாலும்‌ 20-02 -2021 அன்று திரு.விஷாலின்‌ வழக்கறிஞர்‌ மூலமாக ‘இரும்புத்திரை, சக்ரா’ ஆகிய இரு திரைப்படங்களுக்கு மட்டுமான வரவு செலவு கணக்கு முடிந்து விட்டதாக ஓர்‌ ஒப்பந்தம்‌ செய்துகொண்டோம்‌.

‘இரும்புத்திரை’ பைனான்ஸ்க்காக (negative rights) எனது நிறுவனத்தின்‌ பெயரிலும்‌ அத்துடன்‌ சில உறுதிமொழி பத்திரங்களையும்‌ (stamp paper, green sheet, pronote, cheques, letterhead) கொடுத்திருந்தார்‌. (negative rights) எனது நிறுவனத்தின்‌ பெயரில்‌ இருந்த காரணத்தால்‌ திரு.திருப்பூர்‌ சுப்பிரமணியம்‌ பணத்திற்காக திரு.விஷால்‌ கொடுத்த பத்திரங்களை எங்கள்‌ இருவருக்கும்‌ பொதுவான ‘ரெட்டை ஜடை வயசு, ஆயுதபூஜை’ படத்தின்‌ இயக்குநர்‌ திரு.சிவக்குமார்‌ அவர்களிடம்‌ கொடுத்து வைத்திருந்தேன்‌.

இந்த நிலையில்‌ திடீரென திரு.சிவக்குமார்‌ அவர்கள்‌ மாரடைப்பால்‌ மரணம்‌ அடைந்துவிட்டார்‌. அவர்‌ திருமணமாகாதவர்‌ என்பதால்‌ தனி நபராக அடுக்குமாடி குடியிருப்பில்‌ வாழ்ந்து வந்தார்‌. ஆகவே அவர்‌ இறந்தது, இரண்டு நாட்களுக்கு பின்புதான்‌ மற்றவர்களுக்கே தெரியவந்தது. அதன்பின்‌ அந்த பத்திரங்களை எங்கு வைத்தார்‌ என்று தெரியவில்லை, எப்படியும்‌ கிடைத்துவிடும்‌ என்ற நம்பிக்கையில்‌ அவருக்கு தெரிந்த நபர்களிடம்‌ விசாரித்தும்‌ இன்றுவரை கிடைக்கவில்லை.

அதன்பின்‌ கொரோனா காலம்‌ தொடங்கிவிட்டது, இந்நேரத்தில்‌ எனக்கும்‌ திரு.விஷாலுக்கும்‌ இடையில்‌ பணம்‌ வாங்கி, கொடுக்கும்‌ திரு.லக்ஷ்மன்‌ என்பவர்‌ மூலம்‌ அந்த பத்திரம்‌ கிடைக்காமல்‌ போன விஷயத்தை திரு விஷாலுக்கு தெரிவிக்குமாறு கூறினேன்‌. இந்த நிலையில்‌ திரு.விஷால்‌ கடந்த 07-06-2021-ல்‌ காவல்துறையில்‌ என்னிடம்‌ கொடுத்த உறுதிமொழி பத்திரங்கள்‌ திரும்ப கிடைக்கவில்லை என்றும்‌, அதை வேறு யாரிடமும்‌ இருக்கிறதா என்பதை கண்டுபிடித்து தாருங்கள்‌ என்றும்‌ புகார்‌ ஒன்றை கொடுத்துள்ளார்‌.

அவர்‌ கொடுத்த புகார்‌ மிகவும்‌ சரியானதென்றே நானும்‌ கருதுகிறேன்‌. ஏனெனில்‌ வேறு யாரின்‌ கையில்‌ இருக்குமோ என்ற பயத்தில்‌ அதை கொடுத்துள்ளார்‌. ஆனால்‌, அவர்‌ என்னிடமும்‌ கலந்து பேசி நாங்கள்‌ இருவரும்‌ சேர்ந்து புகார்‌ அளித்திருந்தால்‌ தெளிவாக இருந்திருக்கும்‌. ஏனெனில்‌ 2020 ஜனவரியில்‌ அவர்‌ தயாரித்து இயக்கும்‌ ‘துப்பறிவாளன்‌ 2’ திரைப்படத்தின்‌ satellite digital உரிமையின்‌ மீது என்னிடம்‌ பைனான்ஸ்‌ வாங்கியுள்ளார்‌.

இந்த பைனான்ஸ்‌ வாங்கிய தேதியில்‌ இருந்து இன்றுவரை வட்டியும்‌ அசலும்‌ நிலுவையில்‌ உள்ளன. இந்த நிலையில்‌ ‘இரும்புத்திரை’ படத்தின்‌ உறுதிமொழி பத்திரங்களை வைத்து நான்‌ மோசடி செய்ய முயற்சிப்பதாக திரு.விஷால்‌ புகார்‌ செய்துள்ளார்‌ என்ற செய்திகள்‌ ஊடகங்களில்‌ மூலம்‌ வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த செய்திகள்‌ எனக்கு மிகுந்த மன வேதனை அளிக்கின்றன.

நான்கு. மொழிகள்‌, 92 திரைப்படங்கள்‌, 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில்‌ இப்படி ஒரு அவதூர்‌ புகாரை நான்‌ சந்திப்பது இதுவே முதல்‌ முறையாகும்‌. இதுவரை என்னுடைய பணம்‌ பிறரிடம்‌ பாக்கி வரவேண்டியதே தவிர மற்ற எவருடைய பணமும்‌ என்னிடம்‌ இல்லை என்பது தென்னிந்திய திரை உலகத்திற்கே தெரியும்‌, என்னுடைய இந்த அறிக்கையின்‌ தாமதத்திற்கு காரணம்‌, இந்த சம்பவம்‌ நடக்கும்‌ சமயத்தில்‌ நான்‌ வெளியூரில்‌ இருந்த காரணத்தினால்‌ சென்னைக்கு திரும்பிய பிறகு என்னுடைய தன்னிலை விளக்கத்தை தங்களுடன்‌ பகிர்ந்துகொள்கிறேன்‌.

மேலும் ஒரு அறிவிப்பு : திரு சிவகுமாரிடம் இருந்த உறுதிமொழி பத்திரங்கள் (stamp paper, green sheet, pronote, cheques, letterhead) அவரைச் சார்ந்த நபர்களிடமோ அல்லது வேறு யாரிடமுமோ இருந்தால் அதை என்னிடமோ, திரு.விஷாலிடமோ அல்லது காவல்துறையிடமோ ஒப்படைக்கவும். மீறி அதை வைத்திருப்பவர்களோ அல்லது பயன்படுத்த முயற்சி செய்வதோ தெரியவந்தால் அவர்கள் மீது மிக கடுமையான கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை ஊடகங்கள் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus