Paruthiveeran : “போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது”… ஞானவேல்ராஜாவின் அறிக்கைக்கு எதிராக சசிகுமார் ட்வீட்!

  • November 29, 2023 / 06:40 PM IST

பிரபல நடிகர் கார்த்தியின் கேரியரில் மிக முக்கியமான படம், அதுவும் அவர் கதையின் நாயகனாக அறிமுகமான படம் ‘பருத்திவீரன்’. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ப்ரியாமணி நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அமீர் இதனை இயக்கியிருந்தார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

சமீபத்தில், இந்த படத்தை தயாரித்த ‘ஸ்டூடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல்ராஜா மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் அமீர் “‘பருத்திவீரன்’ தொடர்பாகவும், என்னுடைய திரைப்பயணம் தொடர்பாகவும், ஞானவேல்ராஜா கூறிய கருத்துகளில் ஒன்றில் கூட உண்மையில்லை” என்று குறிப்பிட்டு ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

அதன் பிறகு அமீருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன், கரு.பழனியப்பன், சினேகன், சுதா கொங்கரா, பாரதிராஜா என சில திரையுலக பிரபலங்கள் குரல் கொடுத்தனர். இந்நிலையில், இன்று ‘ஸ்டூடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல்ராஜா தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் “‘பருத்திவீரன்’ பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை.

 

என்றைக்குமே ‘அமீர் அண்ணா’ என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும், அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான். நன்றி” என்று கூறியிருந்தார்.

தற்போது, இது குறித்து பிரபல இயக்குநரும், நடிகருமான சசிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் “போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது. அமீர் அண்ணன் ஞானவேல்ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன ‘நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தியிருந்தால்…’ என்று குறிப்பிட்டுச் சொல்கிறார் ஞானவேல்ராஜா. அப்படியெனில் அந்த சில வார்த்தைகள் என்ன? திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம்? இதன்மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல்ராஜா சொல்ல வருவது என்ன? பெயரிடப்படாத அந்தக் கடிதம் யாருக்கு?” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus