“எனக்கெதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதா?” – இயக்குநர் ஷங்கர் வெளியிட்ட அறிக்கை!

  • February 2, 2021 / 01:05 PM IST

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். கடந்த ஜனவரி 30-ஆம் தேதி, ‘எந்திரன்’ படத்தின் கதை தொடர்பாக எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கில் ஷங்கருக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருப்பதாக தகவல் பரவியது. தற்போது, இது தொடர்பாக இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “வணக்கம், எழும்பூர் நீதிமன்றம் எனக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்திருப்பதாக ஒரு பொய்யான செய்தியைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்.

எனது வழக்கறிஞர் திரு.சாய் குமரன், நீதிமன்றத்தை இன்று அணுகி இந்தச் செய்தி குறித்து அவர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். எனக்கெதிராக அப்படி எந்த வாரண்ட்டும் பிறப்பிக்கப்படவில்லை என்பதை உடனடியாக மாண்புமிகு நீதிபதி உறுதி செய்தார். இணையத்தில் தினசரி நீதிமன்ற வழக்குகளின் நிகழ்வுகள் பதிவேற்றுதலில் நடந்த தவறு காரணமாக இப்படி ஒரு விஷயம் நடந்துள்ளது. அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது.

சரி பார்க்கப்படாமல் இப்படி ஒரு பொய்யான செய்தி உலவுவதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. இந்த விஷயம் எனது குடும்பத்துக்கும், நல விரும்பிகளுக்கும் தேவையில்லாத மன உளைச்சலைத் தந்துள்ளது. இது போன்ற பொய்யான செய்திகள் இனி பரவாது என்பதை உறுதி செய்ய, இந்த அறிக்கையை அனைத்து ஊடகங்களும் பகிர வேண்டும் என்று தயவுகூர்ந்து அன்போடு கேட்டுக் கொள்கிறேன். நன்றி” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus