மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் SPB… அவருக்காக சூரி போட்ட ட்வீட்!

  • August 19, 2020 / 02:33 PM IST

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் SPB… அவருக்காக சூரி போட்ட ட்வீட்!  தமிழ் திரையுலகில் பிரபல பின்னணி பாடகராக வலம் வருபவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இவர் இதுவரை 16 இந்திய மொழிகளில் 40000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். ஆறு முறை சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். இவர் ‘கேளடி கண்மணி, திருடா திருடா, காதலன், நாணயம்’ போன்ற பல படங்களில் நடிகராகவும் வலம் வந்திருக்கிறார்.

சமீபத்தில், ‘கொரோனா’வால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறப்பு மருத்துவ குழுவினர் இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர். நேற்று, எஸ்.பி.பாலசுப்ரமணியமின் மகன் சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் “அப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்களின் சிகிச்சையால் அவரது உடல்நலம் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறது. அப்பா சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கும் அனைவருக்கும் நன்றி” என்று பேசியிருந்தார்.

தற்போது, இது தொடர்பாக பிரபல காமெடி நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் “SPB சார், விவரம் தெரிஞ்சு… உங்க குரல கேக்காம நாங்க ஒரு நாளக்கூட கடந்ததில்ல!! விடியக்கால நடந்தாலும் சரி, வீட்ல விசேஷம்னாலும் சரி, தாலாட்டி எங்கள தூங்க வைக்கிறதும் சரி, தன்னம்பிக்கையா தட்டிக்குடுத்து ஓட வைக்கிறதும் சரி, எப்பவுமே உங்க பாட்டுத்தான்!!! எப்பவும் போல இதே சிரிச்ச முகத்தோட நீங்க திரும்ப வந்து எங்களுக்காக பாடணும் – உங்க குரல கேட்டுக்கிட்டே எங்க மீதி வாழ்க்க ஓடணும்னு, ஆத்தா மதுரை மீனாட்சிய மனசார வேண்டிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus