‘வணங்கான்’ படத்திலிருந்து விலகிய சூர்யா… அதிகாரப்பூர்வமாக அறிவித்த இயக்குநர் பாலா!

  • December 6, 2022 / 12:36 AM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, இயக்குநர் பாலா இயக்கும் ‘வணங்கான்’, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம் 2’ மற்றும் இயக்குநர் சிவா படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் பாலா இயக்கும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. மிக விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இயக்குநர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் “வணக்கம். என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ‘வணங்கான்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா? என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.

என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்து விடக்கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.

எனவே ‘வணங்கான்’ திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம் தான் என்றாலும், அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது. ‘நந்தா’வில் நான் பார்த்த சூர்யா, ‘பிதாமகன்’-ல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி ‘வணங்கான்’ பணிகள் தொடரும்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus