குங்கும பூவும் கொஞ்சும் புறாவும், வானவராயன் வல்லவராயன் படங்களை இயக்கிய ராஜமோகன் அடுத்து இயக்கி இருக்கும் படம் அட்ரஸ் . இந்த படத்தை காக்டைல் சினிமா சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரித்துள்ளார் .
அதர்வா முரளி, இசக்கி பரத், புதுமுகம் தியா, தம்பி ராமையா ,ஏ.வெங்கடேஷ், தேவதர்ஷினி, மெட்ராஸ் நந்தகுமார், நாகேந்திரன், கோலிசோடா முத்து உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர் . க்ரிஷ் கோபாலக்ரிஷ்ணா இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடந்தது . அதில் பேசிய இயக்குனர் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும். ஒவ்வொரு கிராமத்திற்கு ஒவ்வொரு பிரச்சனை இருக்கும். நமது நாட்டு பிரதமரிலிருந்து, கவுன்சிலர் வரை கிராமங்கள் கணினி மயமாகிறது என கூறுகிறார்கள். அவர்கள் கூறுவது திருநெல்வேலி வரை உள்ள கிராமங்கள் மட்டுமே, அதை தாண்டிய இடங்கள் கிராமமாக இவர்களுக்கு தெரியவில்லை என்று கூறினார் .
தமிழ்நாட்டிற்கும் ,கேரளாவிற்கும், இடையில் ஒரு கிராமம் உள்ளது. அந்த கிராமத்திற்கு, 2015ல் தான் அட்ரஸ் கிடைத்தது. 1956ல் மொழிவாரி மாநிலமாக பிரிக்கிற போது கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் நடுவில் சிக்கி கொண்டு தனது ‘அட்ரஸை’ தொலைத்த கிராமத்துக்கு அட்ரஸ் கிடைத்ததா இல்லையா என்பதே இப்படத்தின் கதை. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது.நமது நாட்டில் பல கிராமங்கள் அப்படி உள்ளது. அப்படி ஒரு கிராமத்தில் 8 கி மீ நாங்கள் நடந்து சென்று படப்பிடிப்பு நடத்தினோம், நடிகர்களும் அவ்வளவு தூரம் நடந்து வந்து நடித்தனர். பெரிய நடிகர்களுக்கு மட்டும், கொடைக்கானல் அருகில் படப்பிடிப்பு நடத்தினோம். ஒரு கதை படமாக, அந்த கதை முடிவு செய்ய வேண்டும். எனது கதைக்கு உயிர் இருக்கிறது. அது தான் என்னை இங்கு கூட்டி வந்தது என்று பேசினார் .