திரையரங்குகளில் 50% ஆடியன்ஸ் அமர மட்டுமே அனுமதி… தமிழக அரசு அறிக்கை!

  • January 9, 2021 / 01:16 PM IST

‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது, திரையரங்குகளும் மூடப்பட்டது. சமீபத்தில், சில நிபந்தனைகளுடன் (50% ஆடியன்ஸ்) திரையரங்குகளை திறக்கவும், ஷூட்டிங் எடுக்கவும் அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது. இருப்பினும் டாப் ஹீரோக்களின் படங்கள் எதுவும் தியேட்டரில் ரிலீஸாகவில்லை.

விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தை பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 13-ஆம் தேதியும், சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தை ஜனவரி 14-ஆம் தேதியும் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். சமீபத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விஜய் நேரில் சந்தித்து திரையரங்குகளில் 100% ஆடியன்ஸ் அமர அரசாங்கம் அனுமதி கொடுப்பது தொடர்பாக பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் வெளியிட்டிருந்த அறிக்கையிலும் “அரசாங்கம் கடைகள், மால்கள், கடற்கரை என எல்லாமே முழுமையாகத் திறக்கப்பட்டுவிட்டன.

திரையரங்குகள் முழுமையாகத் திறக்கப்பட்டுவிட்டாலொழிய அந்த பழைய நிலை வராது. வசூல் நஷ்டமே ஏற்படும். அரசும் தயைகூர்ந்து 100% இருக்கைகளுக்கு அனுமதி தந்து, பாதுகாப்பு விதிகளை அதிகரித்து, திரையரங்க உரிமையாளர்களையும், சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க நல்ல உத்தரவை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார். அதன் பிறகு கடந்த திங்கட்கிழமை, திரையரங்குகளில் 100% ஆடியன்ஸ் அமர தமிழக அரசு அனுமதி கொடுத்தது. பின் கடந்த புதன்கிழமை, திரையரங்குகளில் 100% ஆடியன்ஸ் அமர தமிழக அரசு அனுமதி கொடுத்திருப்பது விதி மீறல் என்றும், அந்த அனுமதியை திரும்ப பெற வேண்டுமென்றும் தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியது.

தற்போது, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த 4.1.2021 அன்று, தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத்தினர், கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வரும் நிலையில், ரயில், பஸ் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, வணிக வளாகங்கள், வழிபாட்டுத்தலங்கள், கடற்கரைகள், சுற்றுலா தலங்கள், திரைப்பட படப்பிடிப்பு ஆகியவற்றுக்கு பல்வேறு தளர்வுகள் அளித்துள்ள நிலையில், திரையரங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் கருதி திரையரங்குகள் 100 சதவீத இருக்கை பயன்பாட்டுடன் செயல்பட அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதை கருத்தில் கொண்டும், திரைப்பட மற்றும் திரையரங்க தொழிலாளர்கள் நலன் கருதியும், மத்திய அரசு 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதித்திருந்த போதிலும், சங்கத்தின் கோரிக்கையினை பரிசீலனை செய்து, 100 சதவீத இருக்கைகளைப் பயன்படுத்தி திரையரங்குகள் செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தது.

தற்போது, மத்திய அரசின் அறிவுரையை கருத்தில் கொண்டும், இது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை கருத்தில் கொண்டும், நிலையான வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளிலும் மறு உத்தரவு வரும் வரை 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, கூடுதல் காட்சிகளை திரையிட்டுக் கொள்ள திரையரங்கங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வுத்தரவு உடனடியாக அமலுக்கு வருகின்றது. கொரோனா நோய்த் தொற்று ஏற்படாவண்ணம் முகக்கவசம் அணிதல், தனி நபர் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடிக்க பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொது மக்களின் நலன் கருதி, மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொது மக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus