‘நாய் சேகர்’ படத்துக்கு வந்த புதிய சிக்கல்… கடுப்பான நடிகர் வடிவேலு!

  • September 1, 2021 / 05:10 PM IST

‘காமெடி’ என்று சொன்னாலே வடிவேலுவின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் வடிவேலு பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.

இயக்குநர் சுராஜ் இயக்கிய ‘தலைநகரம்’ படத்தில் ‘நாய் சேகர்’, ‘மருதமலை’ படத்தில் ‘என்கவுண்டர் ஏகாம்பரம்’, ‘கத்தி சண்டை’ படத்தில் ‘டாக்டர் பூத்ரி’ போன்ற கதாபாத்திரங்களில் வலம் வந்து நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருந்தார் ‘வைகைப்புயல்’ வடிவேலு. சமீபத்தில், புதிய காமெடி படத்துக்காக நடிகர் வடிவேலுவும் – இயக்குநர் சுராஜும் மீண்டும் கூட்டணி அமைக்கப்போகின்றனர் என்றும், இதற்கு ‘நாய் சேகர்’ என டைட்டில் சூட்டப்பட்டிருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது.

இந்நிலையில், இதே டைட்டிலை தான் பிரபல காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்துக்கும் வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை தயாரிக்கும் ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் ‘நாய் சேகர்’ டைட்டிலை பதிவு செய்து வைத்திருக்கிறதாம். இது தொடர்பாக வடிவேலுவே ‘AGS’ தரப்பிடம் பேசியிருக்கிறார், அப்போது அவர்கள் “இந்த டைட்டில் எங்கள் படத்தின் கதைக்கு மிகவும் பொருத்தமாக அமைந்து விட்டது. ஆகையால், அதை கொடுக்க மாட்டோம்” என்று சொல்லி விட்டார்களாம். இதனால் வடிவேலு டென்ஷனாகி விட்டாராம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus