“என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை”… ஓ.என்.வி விருது சர்ச்சை குறித்து பேசிய வைரமுத்து!

  • May 29, 2021 / 07:32 PM IST

தமிழ் சினிமாவில் டாப் பாடலாசிரியர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘கவிப்பேரரசு’ வைரமுத்து. கேரளாவின் புகழ் பெற்ற ஓ.என்.வி விருதுக்கு வைரமுத்து தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீடூ சர்ச்சையில் சிக்கிய வைரமுத்துவிற்கு ஓ.என்.வி விருதா? என நடிகைகள் பார்வதி – கீது மோகன்தாஸ் – ரீமா கல்லிங்கல், இயக்குநர் அஞ்சலி மேனன், பாடகி சின்மயி ஆகியோர் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின், ஓ.என்.வி கலாச்சார அகாடமி நேற்று வெளியிட்ட புதிய அறிக்கையில் “வைரமுத்துவுக்கு கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட ஓ.என்.வி விருது தொடர்பாக மறுபரிசீலனை செய்ய உள்ளோம்” என்று கூறியிருந்தனர். தற்போது, ‘கவிப்பேரரசு’ வைரமுத்து ட்விட்டரில் “விருதைத் திருப்பித் தருகிறேன்” என்று குறிப்பிட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் “அனைவரையும் வணங்குகிறேன். கேரள மாநிலத்தின் பெருமைமிக்க ஓ.என்.வி இலக்கிய விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்படுவதாக ஓ.என்.வி கல்சுரல் அகாடமி அறிவித்தது, நானும் நன்றி பாராட்டி வரவேற்றேன்.

ஆனால், காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலபேரின் குறுக்கீட்டினால் அந்த விருது மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதாய் அறிகிறேன். இது என்னையும் கவிஞர் ஓ.என்.வி குரூப்பையும் சிறுமைப் படுத்துவதாகுமோ என்று சிந்தையழிகிறேன். அறிவார்ந்த நடுவர் குழுவும் இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுவிடக்கூடாதே என்றும் தவிக்கிறேன். அதனால் சர்ச்சைகளுக்கிடையே இந்த விருதைப் பெறுவதை நான் தவிர்க்கவே விரும்புகிறேன். ஒன்றுமட்டும் உறுதியாகச் சொல்கிறேன். நான் மிக மிக உண்மையாய் இருக்கிறேன். என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை. அதனால் திட்டவட்டமான ஒரு முடிவை எடுத்திருக்கிறேன், அதை மிகுந்த தெளிவோடும் அன்போடும் அறிவிக்கிறேன்.

 

ஓ.என்.வி இலக்கிய விருது அறிவிப்பை நான் ஓ.என்.வி கல்சுரல் அகாடமிக்கே திருப்பி அளிக்கிறேன். எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகை ரூபாய் 3 லட்சத்தை கேரள முதலமைச்சரின் நிவாரண நிதியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன். மற்றும் மலையாள மண்மீதும் மக்கள்மீதும் நான் கொண்டிருக்கும் அன்பின் அடையாளமாக என்னுடைய பங்குத்தொகையாக ரூபாய் 2 லட்சத்தை கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனிப்பட்ட முறையில் நான் வழங்குகிறேன். தமிழுக்கும் மலையாளத்துக்குமான சகோதர உறவு தழைக்கட்டும். இந்த விருது அறிவிப்பைக் கேட்டு என்னைப் பேருள்ளத்தோடு வாழ்த்திப் பெருமை செய்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், உள்ளன்போடு வாழ்த்திய உலகத் தமிழர்களுக்கும், ஊடக உறவுகளுக்கும் என் நன்றி” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus