வலிமை தயாரிப்பாளர் போனி கபூர் உறுதி

  • May 22, 2020 / 08:53 PM IST

நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு வருகிற மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குறிப்பாக மஹாராஷ்டிரா மாநிலம் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் வீட்டுப்பணியாளர் சரண் என்பவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம். மேலும் அந்த பணியாளருக்கு செய்யப்பட்டுள்ள பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாராம்.

இதுகுறித்து தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளதாவது, ”நானும் என் குழந்தைகள் மற்ற பணியாளர்கள் அனைவரும் நலமாக இருக்கிறோம். எங்களுக்கு எந்த வித அறிகுறியும் இல்லை. ஊரடங்கு தொடங்கியதில் இருந்து நாங்கள் வெளியே செல்லவேயில்லை. மஹாராஷ்டிரா அரசுக்கும் சுகாதாரத்துறைக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறோம்.

சுகாதாரத்துறை அறிவித்துள்ள வழிமுறைகளை நாங்கள் முறையாக கடைபிடிக்கிறோம். சரண் பூரண குணமாகி வீடு திரும்புவார் என்று உறுதியாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். தல அஜித் நடிப்பில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தயாரித்த போனி கபூர், தற்போது ‘வலிமை’ படத்தையும் தயாரித்து வருகிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus