தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். இப்போது விஜய் நடிப்பில் ‘வாரிசு’ மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘வாரிசு’ படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இப்படத்தினை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
மேலும், மிக முக்கிய ரோல்களில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, சங்கீதா, யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஷாம், சம்யுக்தா, கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் நடிக்கின்றனர். இதற்கு தமன் இசையமைக்கிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட போஸ்டர்ஸ் மற்றும் ‘ரஞ்சிதமே’ பாடல் இப்படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.
இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது. படத்தை வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்திய விலங்குகள் நல வாரியம் இப்படத்தின் ஷூட்டிங்கில் முன் அனுமதியின்றி ஐந்து யானைகளை பயன்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டு இதன் தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த நோட்டீஸுக்கு ‘வாரிசு’ தயாரிப்பு தரப்பிலிருந்து அடுத்த ஏழு நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டுமாம்.