பாலிவுட் சினிமாவில் பாப்புலர் இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வருபவர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் வெளியான நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள புதிய ஹிந்தி படம் ‘கென்னடி’. இதில் ஹீரோவாக ராகுல் பட்டும், ஹீரோயினாக சன்னி லியோனும் நடித்துள்ளனர்.
சமீபத்தில், அனுராக் காஷ்யப் இந்த படத்துக்காக கொடுத்த ஒரு பேட்டியில் “இப்படத்துக்கான ஸ்க்ரிப்ட் எழுதுகையில் ஒரு பிரபல நடிகரை மனதில் நினைத்து தான் எழுதினேன். அவரின் உண்மையான பெயரும் ‘கென்னடி’ தான். அதனால் தான் இந்த படத்திற்கு ‘கென்னடி’ என பெயர் வைத்தேன். அவர் நடிகர் ‘சீயான்’ விக்ரம் தான்.
நான் அவரை இதில் நடிக்க அணுகியபோது, அவர் எனக்கு எந்த பதிலும் சொல்லவில்லை” என்று கூறியிருந்தார். தற்போது, இது தொடர்பாக நடிகர் ‘சீயான்’ விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் “கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே நீங்கள் என்னிடம் இப்படத்திற்காக பேச முயற்சி செய்தீர்கள் என்றும், ஆனால் நான் உங்களுக்கு பதில் சொல்லவில்லை என்றும் நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதாக இன்னொரு நடிகர் ஒருவர் என்னிடம் சொன்னார்.
அப்போது உடனே, நான் உங்களுக்கு போன் செய்து, உங்களிடம் இருந்து எந்த மெயிலும், மெசேஜ்ஜும் வரவில்லை என்றும், நீங்கள் என்னை தொடர்புகொண்டதாக கூறிய மெயில் ஐடியை நான் இப்போது பயன்படுத்தவில்லை, என்னுடைய நம்பரும் 2 வருடங்களுக்கு முன்பே நான் மாற்றி விட்டேன் என்றும் சொன்னேன். போனில் அன்று சொன்னதுபோலவே, என்னுடைய பெயரில் இருப்பதால் உங்களுடைய ‘கென்னடி’ படத்தை பார்க்க நான் வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Dear @anuragkashyap72 ,
Just revisiting our conversation from over a year ago for the sake of our friends and well wishers on social media. When I heard from another actor that you had tried to reach me for this film & that you felt I hadn’t responded to you, I called you myself…— Vikram (@chiyaan) May 22, 2023