தமிழ் சினிமாவில் 2002-ஆம் ஆண்டு வெளியான படம் ‘சுந்தரா டிராவல்ஸ்’. இந்த படத்தை அசோகன் இயக்க, முரளி ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ராதா என்பவர் நடித்திருந்தார். இப்படத்தில் வடிவேலு காமெடியில் கலக்கியிருந்தார்.
இதில் ஹீரோயினாக நடித்த ராதாவுக்கு இது தான் முதல் படமாம். இதனைத் தொடர்ந்து ‘நவரச நாயகன்’ கார்த்திக்கின் ‘கேம்’, சத்யராஜின் ‘அடாவடி’, கரனின் ‘காத்தவராயன்’ ஆகிய படங்களில் நடித்தார் நடிகை ராதா. முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நடிகை ராதா, காவல் உதவி ஆய்வாளர் வசந்தராஜாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
காவல் உதவி ஆய்வாளர் வசந்தராஜாவுக்கும் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளதாம். நேற்று நடிகை ராதா தனது இரண்டாவது கணவர், நடத்தையில் சந்தேகப்பட்டு தன்னை அடித்து துன்புறுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளர் வசந்தராஜாவிடம் போலீஸார் நடத்திய விசாரணைக்கு பின், அவர் ராதாவிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். தற்போது, கணவர் மன்னிப்பு கேட்டதால் அவர் மீது கொடுத்த புகாரை ராதா வாபஸ் பெற்றுக்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது.