சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் சித்ரா. இவர் சமீபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ரா ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக சின்னத்திரைக்குள் என்ட்ரியானார். ‘மக்கள் டிவி’யில் ஒளிபரப்பான ‘சட்டம் சொல்வது என்ன?’ என்ற நிகழ்ச்சி தான் சித்ரா தொகுத்து வழங்கிய முதல் நிகழ்ச்சி. அதன் பிறகு மக்கள் டிவியில் ‘நொடிக்கு நொடி அதிரடி, ஊர் சுற்றலாம் வாங்க’ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
பின், ஜெயா டிவியில் ஒளிபரப்பான ‘மன்னன் மகள்’ சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார். ‘மன்னன் மகள்’ சீரியலுக்கு பிறகு சன் டிவியில் ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ (சீசன் 3), விஜய் டிவியில் ‘சரவணன் மீனாட்சி’ (சீசன் 2), ஜீ தமிழில் ‘டார்லிங் டார்லிங்’, கலர்ஸ் தமிழில் ‘வேலுநாச்சி’ போன்ற டிவி சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சித்ரா. இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்தார் சித்ரா.
பிரேத பரிசோதனையின் முடிவில் சித்ரா தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டாலும், சித்ராவின் தற்கொலைக்கான காரணம் தொடர்பாக போலீசார் விசாரித்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பே சித்ராவுக்கும், பிரபல தொழிலதிபர் ஹேமந்த் ரவிக்கும் பதிவு திருமணம் நடந்ததாம். கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி ஒரு தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த சித்ராவிடம் “சீரியலில் இனிமேல் நெருக்கமான காட்சிகளில் நடிக்க வேண்டாம்” என்று ஹேமந்த் ரவி சொன்னதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சித்ரா தற்கொலை செய்து கொண்டார் என்ற உண்மை தெரிய வந்ததும், போலீசார் நேற்று இரவு ஹேமந்த் ரவியை கைது செய்தனர்.